Sunday, March 13, 2005

ரசித்த படங்களை ஒரு இடத்தில் எழுதலாம் என்ற ஆவலில் ஒரு வலைப்பதிவு- கூகுள் புண்ணியத்தில். இந்த திரைப்படப் பகுதியில் அரசியலே இல்லாமல் வெறும் ரசனை அதனை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்ற குறிக்கோள் மட்டுமே வைத்துக் கொள்வது என்று ஒரு சிறு கொள்கை. வைஜெயந்திமாலா நடித்த வாழ்க்கை என்ற படத்தில் என் தந்தையாரின் பெயரும் பத்தோடு பதினைந்தாக வரும் என்று சென்றமுறை என்னுடைய இந்தியப் பயணத்தில் நாங்கள் பேசிக் கொண்ட போது தான் எனக்கு என் தந்தை சினிமாத் துறையில் பணியாற்றியிருக்கின்றார் என்ற விபரமே தெரியும். எங்கள் தந்தை வழி குடும்பத்தில் சினிமா பைத்தியம் என்று பலர் உண்டு. சினிமா தியேட்டரில் சென்று உக்காந்து கொள்வது என்பது மிக முக்கியமான சடங்காகவே எனக்கு இருந்திருக்கின்றது. நான் டூர் பார்க்கப் போன இடத்தில் எல்லாம் அழுது பிடிங்கி சினிமா பார்த்திருக்கின்றேன். என் நண்பர்கள் சிரிப்பார்கள். இங்க வந்து சினிமாவா என. ஹைத்தராபாத்தில், கொல்கட்டாவில், கொடைக்கானலில், ஊட்டியில், திருவனந்தப்புரத்தில் எல்லாம் சினிமா பார்த்த அனுபவம் உண்டு அந்த அந்த இடங்களுக்கு இரண்டு - மூன்று நாட்கள் டூரில் கூட. அந்த அளவு சினிமா பைத்தியம் உண்டு ரசனை உண்டா என்றால் தெரியாது. இனி தான் தெரியவரும் :-)).

இன்று சன் டீவியில் தெரியாத்தனமாக விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்துத் தொலைத்தேன். உண்மையில் அரட்டை அரங்கம் கான்சப்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடிக்கும். கடிதங்கள் பகுதி, ஆசிரியருக்கு கேள்வி பதில் பகுதி, கேள்விக்கு பதிலாக வரும் ஆலோசனை பகுதி, பெண்கள் பத்திரிக்கையில் வரும் வாசகர் பக்கம்/ வாண்டுகள் பக்கம் போன்றவைகள் எனக்கு பிடிக்கும் அது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற கவலை கூட இல்லாமல். தினப்படி பப்பரில் "ask amy" என்ற பகுதி விளையாட்டுக்கு பிறகு படிக்கும் பகுதி. சரி அரட்டை அரங்கம் பார்த்தற்கு இந்த அளவு சால்ஜாப்பு போதும் என நினைக்கின்றேன். அரட்டை அரங்கத்தில் மிகப் பிற்ப்போக்கான கருத்துக்கள் அலட்சியமாக, கூடவே மக்கள் கைத்தட்டலுடன் வரும் போதெல்லாம் உடல் கூசிப்போய் மண்ணாந்தை போல கேட்டுவிட்டு பின் மறந்திருக்கின்றேன். ஆனால் இன்று கேட்டதற்கு மன்னிப்பே கிடையாது. அந்த விசு என்ற அந்த பிற்போக்கான மனிதரை(நாயை என்று எழுதி மனது வராமல் மாத்தி விட்டிருக்கின்றேன்)யெல்லாம் என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த வலை உலகத்தில். ஆனால் இந்த மாதிரி ஆட்கள், அதுவும் ஊடகத்துறையில் இருப்பவர்களே இந்தளவு பிற்போக்கானவர்களாக இருக்கும் நிலையில், இந்தியா வல்லரசானால் என்ன ஆகும் என்று யோசிக்கவே முடியவில்லை.


ஒரு பத்து வயது பெண் குழந்தை பேசிக் கொண்டு இருக்கின்றது. அந்த குழந்தை என்ன பேசியது என்பது முக்கியமில்லை. ஒரு இடத்தில் அந்த குழந்தை (ஞாபகத்தில் இருந்து)


பெண் குழந்தை:


எங்களுக்கு பெற்றொரிடத்தில் சுதந்திரமே கிடையாது - அங்கப் போனா தப்பு; இங்கே போனா தப்பு; அதைப் பார்த்தா தப்பு இவரோட விளையாண்டா தப்பு; சிரிச்சா தொந்திரவு.


இடைமறித்த விசு


இத்துணுண்டு இருந்துட்டு இப்படி பேசறே. சிரிச்சா தொந்திரவுன்னு சொல்றே. தெரிஞ்சுண்டு சொல்றியா இல்ல தெரியாம சொல்றியான்னு தெரியலா.


கூட்டமே கை தட்டி சிரிக்கின்றது.


அடுத்து எழுந்த பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறுவன்.


இந்த பொண்ணுங்க என்னமோ சுதந்திரம் சுதந்திரம்ன்னு சொல்லுறாங்க. அவங்களுக்கு தெரியல ஆம்பிளைங்க கல்லு மாதிரி. சுதந்திரம்ன்கிற ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா சின்ன அசைவு இருக்கும் அவ்வளவு தான். பொம்பிளைங்க கண்ணாடி மாதிரி. ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா நொறுங்கிடும் ஒட்டகூட வைக்க முடியாது.


கூட்டம் கை தட்ட, விசு அந்த சின்ன பொண்ண எழுப்பி,


"உனக்கு புரியறதா. ஆண்கள் கல்லு மாதிரி. அப்படி இப்படி இருந்தாலும் அவங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஆனா பொண்ணுங்க அப்படி கிடையாது. அவங்க கண்ணாடி மாதிரி. "அப்படி இப்படி" இருந்தா நொருங்கிடும். குடும்பத்துக்கே கேவலம் தான்."


இந்த சன் டீவி பண்ணாடை நாய்களை என்ன செய்தா தகும்?

7 comments:

Narain Rajagopalan said...

அதையெல்லாம் ஒரு நிகழ்ச்சின்னு பார்க்கறீங்களே உங்களை சொல்லணும். அது சன் டிவியல்ல, சனியன் டிவி

Thangamani said...

இதில் விசுவை மட்டும் சொல்வதில் ஒன்றுமில்லை; எனக்கும் இப்படி அடக்கவொன்னா கோபம் வந்தது. ஆனால் எது விசுவிடம் வெளிப்படையாத் தெரிகிறதோ அது ஒவ்வொரு இந்திய ஆணிடமும் தோலுக்கடியில் இருக்கிறது.. உயர்ந்த கல்வியையும், வாழ்க்கைச் சூழலையும் கொண்டிருப்பவர்கள் கூட மிகச்சாதரணமாக, இயல்பாக இந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா வல்லரசாவதில் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் அப்படி வல்லரசாகும்பட்சத்தில் அது அமெரிக்காவை விட நிச்சயம் கொடுமையானதாக அடக்குமுறையை அது பெண்களிடமும், எளியவர்களிடமும் நிகழ்த்தும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. ஏனெனில் மனித உரிமை என்ற கருத்தாக்கம் கூட இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.

-/பெயரிலி. said...

:O

இளங்கோ-டிசே said...

ஆனந்தன், நீங்கள்,மீண்டும் எழுத வந்ததைப் பார்க்க சந்தோசமாகவிருக்கிறது.
புலம்பெயர்ந்த சூழலிலும் அரட்டை அரங்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாகப் பார்க்கும் பலரைக்கண்டிருக்கின்றேன். நான், அரட்டை அரங்கத்தைக் கைகழுவி வருடங்கள் பலவாயிற்று. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, சிறுவர், சிறுமிகள் எல்லாம் பாழாகிக்கொண்டிருப்பதை நகைச்சுவையாகப் பார்த்து இரசிக்கும் கூட்டத்தை என்ன செய்வது?
//தினப்படி பப்பரில் "ask amy" என்ற பகுதி விளையாட்டுக்கு பிறகு படிக்கும் பகுதி//
அடடா நீங்களும் எனது கேஸா :-)?

பி.கு: Can you increase your font size here? It is hard to read (atleast for me). Thankx.

ROSAVASANTH said...

வாங்க! சினிமா பதிவை தமிழ்மணத்தில் காணுமே!

Anonymous said...

நன்றி நண்பர்களே. சிறு பிள்ளைகள் இன்வால்வ் ஆனதால் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட வேண்டியதாகப் போய்விட்டது. அரட்டை அரங்கம் ஒரு திராபை தான். இருந்தாலும் அது ஒரு நல்ல கான்சப்ட். என்ன செய்வது நாய் பெற்ற தெங்கம் பழம் ( வேறொன்றிற்கு பயன் பட்ட உதாரணமமென்றாலும்). தங்கமணி சொல்வது போல் பொதுவான "இந்திய" ஆண்கள் பிற்போக்குதான். இங்கு இந்த அமெரிக்க தேசத்தில் சந்திக்கும் நபர்களுடன் சகஜமாக அரசியல் பேசமுடியாது. வெள்ளைக்காரணுடன் காரசாரமாக பேசி புஷ்ஷை திட்டலாம். நம் நாட்டு அரசியலில் வாய் திறக்கமுடியாது. அந்தளவு இஸ்லாமிய எதிர்ப்பு. ஒரு இஸ்ரேலிய ஜூவிடம் கூட பார்க்க முடியாது அந்த வெறுப்பை. இஸ்லாம் மட்டுமில்லாமல், பெண்கள் / நலிந்தோர் பக்கம் இருக்கும் எகத்தாளமோ காது கொடுத்து கேட்க முடியாது. நல்ல வேளை இந்தியாவில் இவ்வளவு சாதிகளும் மொழி வாரி பிரிவினைகளூம்.

அனாதை

Anonymous said...

சினிமா பற்றி எழுதப் போவதாகச் சொன்னீர்கள்.சினிமா நம் தமிழ் சமூகத்தை பாதிப்பது குறித்து சில கேள்விகளை முன்வைக்கிறேன். நான் பார்த்த வரையில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும், தெலுங்கர்களும் சினிமாவின் மீது அதீத மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மோகம் படித்தவர் - பாமரர் , ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரிடமும் இருக்கிறது.

1. சினிமாவின் சமூகப் பயன் மதிப்பீடு என்ன? குறிப்பாக நம் போன்ற சமூகங்களுக்கு
2. நாம் ஏன் இந்த மாதிரியான நாளாம்தர சினிமாக்களுக்கு ( இதுவரை தமிழில் வெளிவந்த உருப்படியான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்) இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இவை தான் அடிப்படைக் கேள்விகள். கற்றறிந்த சபையோர் யாரேனும் விரிவாக பதில் அளித்தாலோ , தனிப் பதிவு தொடங்கினாலோ நன்றாக இருக்கும்.