Sunday, March 13, 2005

ரசித்த படங்களை ஒரு இடத்தில் எழுதலாம் என்ற ஆவலில் ஒரு வலைப்பதிவு- கூகுள் புண்ணியத்தில். இந்த திரைப்படப் பகுதியில் அரசியலே இல்லாமல் வெறும் ரசனை அதனை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்ற குறிக்கோள் மட்டுமே வைத்துக் கொள்வது என்று ஒரு சிறு கொள்கை. வைஜெயந்திமாலா நடித்த வாழ்க்கை என்ற படத்தில் என் தந்தையாரின் பெயரும் பத்தோடு பதினைந்தாக வரும் என்று சென்றமுறை என்னுடைய இந்தியப் பயணத்தில் நாங்கள் பேசிக் கொண்ட போது தான் எனக்கு என் தந்தை சினிமாத் துறையில் பணியாற்றியிருக்கின்றார் என்ற விபரமே தெரியும். எங்கள் தந்தை வழி குடும்பத்தில் சினிமா பைத்தியம் என்று பலர் உண்டு. சினிமா தியேட்டரில் சென்று உக்காந்து கொள்வது என்பது மிக முக்கியமான சடங்காகவே எனக்கு இருந்திருக்கின்றது. நான் டூர் பார்க்கப் போன இடத்தில் எல்லாம் அழுது பிடிங்கி சினிமா பார்த்திருக்கின்றேன். என் நண்பர்கள் சிரிப்பார்கள். இங்க வந்து சினிமாவா என. ஹைத்தராபாத்தில், கொல்கட்டாவில், கொடைக்கானலில், ஊட்டியில், திருவனந்தப்புரத்தில் எல்லாம் சினிமா பார்த்த அனுபவம் உண்டு அந்த அந்த இடங்களுக்கு இரண்டு - மூன்று நாட்கள் டூரில் கூட. அந்த அளவு சினிமா பைத்தியம் உண்டு ரசனை உண்டா என்றால் தெரியாது. இனி தான் தெரியவரும் :-)).

இன்று சன் டீவியில் தெரியாத்தனமாக விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்துத் தொலைத்தேன். உண்மையில் அரட்டை அரங்கம் கான்சப்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடிக்கும். கடிதங்கள் பகுதி, ஆசிரியருக்கு கேள்வி பதில் பகுதி, கேள்விக்கு பதிலாக வரும் ஆலோசனை பகுதி, பெண்கள் பத்திரிக்கையில் வரும் வாசகர் பக்கம்/ வாண்டுகள் பக்கம் போன்றவைகள் எனக்கு பிடிக்கும் அது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற கவலை கூட இல்லாமல். தினப்படி பப்பரில் "ask amy" என்ற பகுதி விளையாட்டுக்கு பிறகு படிக்கும் பகுதி. சரி அரட்டை அரங்கம் பார்த்தற்கு இந்த அளவு சால்ஜாப்பு போதும் என நினைக்கின்றேன். அரட்டை அரங்கத்தில் மிகப் பிற்ப்போக்கான கருத்துக்கள் அலட்சியமாக, கூடவே மக்கள் கைத்தட்டலுடன் வரும் போதெல்லாம் உடல் கூசிப்போய் மண்ணாந்தை போல கேட்டுவிட்டு பின் மறந்திருக்கின்றேன். ஆனால் இன்று கேட்டதற்கு மன்னிப்பே கிடையாது. அந்த விசு என்ற அந்த பிற்போக்கான மனிதரை(நாயை என்று எழுதி மனது வராமல் மாத்தி விட்டிருக்கின்றேன்)யெல்லாம் என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த வலை உலகத்தில். ஆனால் இந்த மாதிரி ஆட்கள், அதுவும் ஊடகத்துறையில் இருப்பவர்களே இந்தளவு பிற்போக்கானவர்களாக இருக்கும் நிலையில், இந்தியா வல்லரசானால் என்ன ஆகும் என்று யோசிக்கவே முடியவில்லை.


ஒரு பத்து வயது பெண் குழந்தை பேசிக் கொண்டு இருக்கின்றது. அந்த குழந்தை என்ன பேசியது என்பது முக்கியமில்லை. ஒரு இடத்தில் அந்த குழந்தை (ஞாபகத்தில் இருந்து)


பெண் குழந்தை:


எங்களுக்கு பெற்றொரிடத்தில் சுதந்திரமே கிடையாது - அங்கப் போனா தப்பு; இங்கே போனா தப்பு; அதைப் பார்த்தா தப்பு இவரோட விளையாண்டா தப்பு; சிரிச்சா தொந்திரவு.


இடைமறித்த விசு


இத்துணுண்டு இருந்துட்டு இப்படி பேசறே. சிரிச்சா தொந்திரவுன்னு சொல்றே. தெரிஞ்சுண்டு சொல்றியா இல்ல தெரியாம சொல்றியான்னு தெரியலா.


கூட்டமே கை தட்டி சிரிக்கின்றது.


அடுத்து எழுந்த பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறுவன்.


இந்த பொண்ணுங்க என்னமோ சுதந்திரம் சுதந்திரம்ன்னு சொல்லுறாங்க. அவங்களுக்கு தெரியல ஆம்பிளைங்க கல்லு மாதிரி. சுதந்திரம்ன்கிற ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா சின்ன அசைவு இருக்கும் அவ்வளவு தான். பொம்பிளைங்க கண்ணாடி மாதிரி. ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா நொறுங்கிடும் ஒட்டகூட வைக்க முடியாது.


கூட்டம் கை தட்ட, விசு அந்த சின்ன பொண்ண எழுப்பி,


"உனக்கு புரியறதா. ஆண்கள் கல்லு மாதிரி. அப்படி இப்படி இருந்தாலும் அவங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஆனா பொண்ணுங்க அப்படி கிடையாது. அவங்க கண்ணாடி மாதிரி. "அப்படி இப்படி" இருந்தா நொருங்கிடும். குடும்பத்துக்கே கேவலம் தான்."


இந்த சன் டீவி பண்ணாடை நாய்களை என்ன செய்தா தகும்?


மேலும் படிக்க