Saturday, January 17, 2009

உச்சநீதிமன்றக் கதை...


அமெரிக்க தேர்தல்களுக்கு முன் இந்தக் கட்டுரை முடிந்தால் நல்லது என நினைத்தது தப்பிப் போய் விட்டது. ஆனால் பராக் வெற்றி, உச்ச நீதிமன்றம் வலது பக்கமாக பலமாக சாய்ந்து விடும் என்ற பயமும் இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு என்பிஆர் ரேடியோவில் மெக்கெயின் அல்லது பழமைவாதிகள் ஆட்சிக்கு வந்தால், உச்ச நீதிபதிகளின் சமன் எவ்வாறு கெடும் , அந்த கேடு எந்தளவிற்கு பாதிக்கும் என்று கேட்டு, உண்மையிலே பயந்து அதை பதிவு செய்ய நினத்ததின் விளவு தான் அந்த கட்டுரையின் ஆரம்பம். இன்று இந்தச் செய்திக் குறிப்பில் கண்ட மார்பரி - மாடிசன் வழக்கைப் பற்றிய பின் குறிப்பு என்னைத் தூசி தட்ட வைத்து விட்டது.

அமெரிக்க ஆரம்பகால வரலாற்றில் கூட்டாட்சியாளர் (Fedaralists) எதிர் கூட்டாட்சியாளர் என வலுவான இரு பிரிவு இருந்தன. ஜான் ஆடம்ஸ் போன்றோர் கூட்டாட்சியாளர்களாகவும், தாமஸ் ஜெஃபர்சன் போன்றார் எதிர் பக்கமும் இருந்தனர். இந்த இரு பிரிவினர் இடையேயான வாதங்கள் தான் அமெரிக்க கூட்டாட்சியின் அடிப்படைச் சட்டங்களை எழுத உதவியது. பரந்த, முற்போக்கான, அரசாங்க கனவைக் கொண்ட, இள ரத்த கூட்டாட்சியாளர்களும், பரந்த அரசாங்கமாக இருந்த பிரிடனிடம் இருந்து சற்றுமுன் தான் விடுதலை பெற போராடிய மாநில மற்றும் மாநில அரசாங்களின் வலிமைக்காக நின்ற அதே சமயம் வயதாகிக் கொண்டிருந்த எதிர் கூட்டாட்சியாளர்களும் நடந்த விவாதங்கள் தான் பின்பு ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ் என்னும் பெயர் பெற்றது. உருவாகி வரும் அமெரிக்க அடிப்படை சட்டங்கள், மாநிலங்களின் சட்டங்களை விட பெரிது என எல்லோரும் ஏற்றுக் கொள்ள அப்பொழுது நடந்த விவாதம் இன்றும் மாறுபட்ட வகைகளில் தொடர்வது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகத் தான் நான் கருதுகின்றேன். இந்த பிரசித்தி பெற்ற தனிமனித உரிமை சாசனமே, எதிர் கூட்டாட்சியாளர்களைச் சமாதானப்படுத்த ஏற்படுத்திய ஒன்று தான். அதே சமயம் இப்படி சமாதானப் படுத்த நடந்த விடயங்களில், கை விடப்பட்ட ஒன்று தான் அடிமை மறுப்பு. தெற்கு மாநிலங்களின் உணர்ச்சிபூர்வமான ஒன்றாக அடிமை வைத்துக் கொள்ளும் உரிமை இருந்த சமயம். பென்சமின் ஃபிராங்களின் போன்ற தீவிர அடிமை மறுப்பாளர்கள், அடிமை மறுப்பை , அமெரிக்க சட்டமாக இணைக்கப் போராடிய சமயம். கூட்டாட்சியாளர்கள் அந்த விடயத்தை கூட்டாட்சியை நிலை நாட்ட, தென் மாநிலங்களில் விலைக்கு வித்து விட்டனர், 70-80 ஆண்டுகளில், அதுவே கூட்டாட்சியையே குலைக்க வைக்க திரும்ப வரும் எனத் தெரியாமல்.

கூட்டாட்சியாளர்களைப் பற்றி இரு வேறு வகைகளில் வரலாற்றாளர்கள் பார்கின்றார்கள், ஒரு வகை, கூட்டாட்சியாளர்கள், மற்றும் எதிர் கூட்டாட்சியாளர்கள் பிரிவினை, கொள்கை கோட்பாடு சார்ந்தது கூடவே அதில் பொருளாதார நோக்கு இல்லை என்றும், மற்றொரு வகை (முக்கியமாக சார்ல்ஸ் பேர்ட்) இந்தக் கூட்டாட்சி கோட்பாடே, பொருளீட்டாளர் நலன்களுக்காகவும், அவர்களுக்கிடையே சட்ட ஒழுங்கினை ஏற்படுத்தவும், மேலும் வலுமையான மத்திய அரசாங்கம் இருந்தால், அவர்களது கடல்வழி வணிகத்துற்கு பாதுகாப்பாக இருக்க வந்ததே எனவும் பார்க்கின்ற்னர். இந்தக் கூட்டாட்சியினர் மற்றும் எதிர் கூட்டாட்சியினர் தான் தற்போது திரிந்து வழிந்து குழம்பி டெமாகிரேட்ஸ் எனவும் ரிபப்ளிகன் எனவும் நிற்கின்றனர்.

முதல் பத்து வருடங்கள் , ஜார்ஜ் வாஷிங்டனின் அரசாங்கத்தில், இரு குழூவினருமே பங்கேற்றிருந்தலில், அமெரிக்க ஆதார சட்டங்கள் பற்றிய விவாதங்கள், மக்கள் மன்றம், மாநில அரசு மற்றும் அதிபர் அரசாங்கத்தினடமே நடந்தது. உச்சநீதிமன்றம் எந்தளவு அதிகாரம் கொண்டது எனத் தெரியாமலே இருந்தது எனலாம்.

அடுத்த அதிபர் ஜான் ஆடம்ஸ் காலத்தில் தான் கூட்டாட்சியாளர்கள் ஆதரவு இழக்கத் தொடங்கியிருந்தனர். டெமாகிரேட்-ரிபப்ளிகன் என்னும் கட்சி வளரத் தொடங்கியது.
அடுத்த அதிபரான ஜான் ஆடம்ஸ் தனது ஆட்சி அதிகாரத்தின் கடை நாட்களில் இருந்த சமயம் அது 1800. அந்த தேர்தலில் தனது ஆட்சியை ஜெஃபர்சனிடம் இழந்திருந்தார். சொல்லப் போனால் மூன்றாவதாக வந்திருந்தார். அடுத்த அதிபர் பதிவியேற்கவில்லை இன்னும். அப்பொழுது உச்ச நீதிபதியாக இருந்தவர் ராஜினாம செய்து விட்டார். உச்ச நீதிபதியாக ஒரு கூட்டாட்சி சார்பாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், தன்னுடைய அரசு நிர்வாகியாக இருந்த ஜான் மார்ஷலையே நியமனம் செய்தார். மேலும் ஆடம்ஸ் தனது ஆட்சியின் கடைசி நாளன்று, நூற்றுக்கனக்கான மத்திய நீதிபதிகளை ( உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல) நியமனம் செய்தார். கடைசி நாளில் அரசு நிர்வாகி ஜான் மார்ஷலும் ஆடம்ஸ்சுடன் இனைந்து நியமதிற்கான காசோலையை கையெழுத்திட்டு அவசர அவசரமாக அனுப்ப வேண்டியதாகியது. சில பேருக்கு காசலை அனுப்பக் கூட நேரமில்லை. நியமனங்கள் தங்கிப் போனன.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜ்ஃபர்சனும், அவரது நிர்வாகியான ஜேம்ஸ் மாடிசனும் தங்கிப் போன நியமனங்களை / காசோலைகளை அனுப்ப மறுத்தனர். அப்படி கிடைக்க இருந்த வில்லியம் மார்பரி என்பர் சுப்ரீ,ம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கோர்டில் உச்ச நீதிபதியாக ஜான் மர்ஷல்.

உச்ச நீதிமன்றத்துக்கு சோதனை. காசோலை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டு அதை ஜ்ஃபர்சன் உதாசீனப் படுத்தக் கூடும். விளைவுகள் கோளாறாக இருந்தன

மார்ஷலின் பரிபாலனை இவ்வாறாக இருந்தது

மார்பரி பக்கம் நீதி இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி பெறவேண்டியது சரியான வழி இல்லை. உச்ச நீதிமன்றம் அரசு இயந்திரங்களுக்கு இடையேயான விவகாரத்தில் நீதி வழங்கும் முழு உரிமையும், மற்ற வ்ழக்குகளில், வழக்கின் முடிவினை "மறுபரிசீலினை" செய்து அந்த வழக்கு முடிவு ஆதார சட்டதின் வழி இருக்கின்றதா அல்லது எதிராக இருக்கின்றதா என முடிவு செய்யும் "அதிகாரம் மட்டும்" இருக்கின்றது.

இதில் மூன்று குழுவினருக்கும் இழப்பு போல், "நீதி இருந்தாலும்" என்று புது நிர்வாகத்துக்கு ஒரு குட்டு, "சரியான வழி இல்லை" என மார்பரிக்கு ஒரு குட்டு, "மறு பரீசீலினை அதிகாரம் மட்டும்" என உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு குட்டு என்பது போல் காட்டி, மறுபரிசீலினை செய்யும் அதிகாரம் என்று ஒன்றை புதிதாக உருவாக்கி, அமெரிக்க நிர்வாகத்தில் தலையை நீட்டி கால்களை அகட்டி உட்கார்ந்து கொள்ள வைத்து விட்டார் மார்ஷல்.

பின்குறிப்பு
இந்த வழக்கில் மார்ஷலுக்கு conflict of interest இருக்குமா?

தொடரலாம்...

மேலும் படிக்க